சமச்சீர் கல்வி தந்து சாமானியனையும் கல்வி கற்க வைத்தவர் கருணாநிதி -சபாநாயகர் அப்பாவு பேச்சு


சமச்சீர் கல்வி தந்து சாமானியனையும் கல்வி கற்க வைத்தவர் கருணாநிதி -சபாநாயகர் அப்பாவு பேச்சு
x

பெண்களை பட்டம் பெற வைத்ததோடு, சமச்சீர் கல்வி தந்து சாமானியனையும் கல்வி கற்க வைத்தவர் கருணாநிதி என சபாநாயகர் அப்பாவு பேசினார்.

சென்னை,

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கருணாநிதியை பற்றி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பில் ''சட்டமன்ற நாயகர் - கலைஞர்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம், பேச்சு, கட்டுரை உள்பட போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் சட்டமன்ற நாயகர்-கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் கல்லூரி முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அரசு கொறடா செழியன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பரந்தாமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், சட்டசபை முன்னாள் பேரவை செயலாளர் செல்வராஜ், கல்லூரிக்கல்வி துணை இயக்குனர் ராவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டம் பெற்ற பெண்கள்

கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

சட்டமன்றத்தில் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள், செயல்பாடுகள் சாமானிய மக்களுக்கும் சென்றடைந்தது. கலைஞரின் முயற்சியால், இந்தியாவில் பட்டம் படித்தவர்களின் சராசரி 34 சதவீதம் என்று இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51 சதவீதமாக இருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

8-ம் வகுப்பு படித்தால் ரூ.3 ஆயிரம் திருமண உதவி, 10-ம் வகுப்பு படித்தால் ரூ.6 ஆயிரம், 12-ம் வகுப்பு படித்தால் ரூ.10 ஆயிரம், பட்டம் படித்தால் ரூ.25 ஆயிரம் என பெண்களை படி, படி என்று படி ஏற வைத்து பட்டம் பெற வைத்தார், கலைஞர் கருணாநிதி.

பெருமை

இதுமட்டுமல்லாமல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த புதுமைப் பெண் திட்டம். இதன் விளைவாக இந்தியாவில் பெண்கள் சராசரியாக 26 சதவீதம் பேர் பட்டம் பெற்றாலும், தமிழ்நாட்டில் இந்த சராசரி 72 சதவீதமாக உள்ளது.

இதுதான் சட்டமன்றத்தில் கருணாநிதி ஆற்றிய சாதனைகள். சமச்சீர் கல்வி தந்து சாமானியனும் சர்வதேச தரத்தில் கல்வி கற்க வைத்த பெருமை திராவிடத்துக்கும், கலைஞருக்கும் உண்டு.

காந்தி கத்தியின்றி ரத்தமின்றி அமைதியான முறையில் நாட்டின் சுதந்திரத்தை பெற்று தந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பாதுகாக்கப்பட்டார். தென் அமெரிக்காவில் வக்கீலாக இருந்தபோது பாதுகாக்கப்பட்டார். சுதந்திரம் கிடைத்தது, அவரை இழந்தோம். அறிவார்ந்த சமூகமாக போற்றப்படும் அந்த 4 சதவீதம் பேர்தான், அவர்களின் மதவெறிதான் காந்தியை கொலை செய்தது. காந்தியை இழந்தோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கருத்தரங்கில் கருணாநிதி பற்றி பேசிய 3 மாணவிகளுக்கு சபாநாயகர் அப்பாவு ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.


Next Story