ரூ.10 லட்சம் கேட்டு சினிமா பைனான்சியர் காரில் கடத்தல்


ரூ.10 லட்சம் கேட்டு சினிமா பைனான்சியர் காரில் கடத்தல்
x

மதுரையில் ரூ.10 லட்சம் கேட்டு சினிமா பைனான்சியர் காரில் கடத்தப்பட்டார்.

மதுரை

மதுரையில் ரூ.10 லட்சம் கேட்டு சினிமா பைனான்சியர் காரில் கடத்தப்பட்டார்.

சினிமா பைனான்சியர் கடத்தல்

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 43). சினிமா பைனான்சியர். மேலும் இவர் ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவராகவும் உள்ளார். சம்பவத்தன்று பிரேம்குமார் நண்பர் பாண்டியுடன் காரில் பாண்டிகோவில் ரிங் ரோட்டுக்கு சென்றார். அங்குள்ள மதுபான பாரில் பாண்டி மதுபாட்டில்கள் வாங்குவதற்காக சென்றார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிரேம்குமாரை அரிவாள் முனையில் காரில் கடத்தியது. அவர்களது கார் சிவகங்கை மாவட்டம், இடையமேலூர், புதுப்பட்டி கண்மாய்க்கு சென்று நின்றது. அப்போது அந்த கும்பல் பிரேம்குமாரிடம் ரூ.10 லட்சம் கொடுத்தால் உயிரோடு விட்டு விடுவதாக மிரட்டியது. அதற்கு பிரேம்குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். அதற்கு அந்த கும்பல் உன் வீட்டில் இருக்கும் நகைகளை கொடு. இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியது.

34 பவுன் நகைகள் பறிப்பு

அதில் பயந்து போன பிரேம்குமார் உடனடியாக மனைவிக்கு போன் செய்தார். பின்னர் கடத்தல் கும்பலில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்கு சென்று 34 பவுன் நகைகளை வாங்கி வந்தான். அதன்பின்னர் அந்த கும்பல் பிரேம்குமாரை கே.கே. நகரில் இறக்கி விட்டு விட்டு தப்பியது. இந்த சம்பவம் குறித்து அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலபனங்காடி அழகுமலையான் நகரை சேர்ந்த குண்டு சரவணன் (42) ஒத்தக்கடையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் தெரிவித்த தகவலின் படி 34 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாய்ஸ் மணி, இடையபட்டி தனபால், அவரது சகோதரர் தனசேகர், பாய்ஸ் மணியின் நண்பர் உள்பட சிலர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story