திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 1½ வயது ஆண் குழந்தை கடத்தல்


தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 1½ வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ், கொத்தனார். இவருக்கு ரதி என்ற மனைவியும், ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஸ் (1½ வயது) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் குழந்தை ஸ்ரீஹரிசுடன் கடந்த மாதம் 28-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதற்காக வந்தனர். அங்கு கோவில் வளாகத்தில் தங்கி இருந்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் அவர்களுடன் நன்றாக பேசி பழகி வந்தார். மேலும் அவர்களுடனேயே தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் காலையில் ரதி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் துணி துவைப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வடக்கு டோல்கேட் அருகே உள்ள சுகாதார வளாகத்துக்கு வந்தார். அவர்களுடன் அந்த பெண்ணும் வந்தார். அப்போது முத்துராஜ் சோப்பு வாங்கி வருவதாக கூறி கடைக்கு சென்றார். அதே நேரத்தில் குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து விட்டு வருவதாக அந்த பெண் தூக்கி சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராஜூம், அவரது மனைவி ரதியும் தங்களது குழந்தையை தேடினர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் அவர்களுக்கு அந்த பெண் தங்களுடன் நன்றாக பழகி நாடகமாடி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை அந்த பெண் கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

அதன் அடிப்படையில், குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலட்சுமி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பட்டப்பகலில் குழந்தையை பெண் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story