கொடைக்கானல் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி


கொடைக்கானல் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி
x

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி கொடைக்கானல் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி நடந்தது. அந்த பணத்தை போலீசார் மீட்டனர்.

திண்டுக்கல்

கொடைக்கானலை சேர்ந்தவர் ஹரிகரசுதன் (வயது 35). இவர், டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராம் செயலியில் கிரிப்டோ கரன்சி டிரேடிங் எனும் பெயரில் ஹரிகரசுதனுக்கு ஒரு தகவல் வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், கிரிப்டோ கரன்சியில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதித்து விடலாம். எனவே குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பும்படி அந்த நபர் கூறியிருக்கிறார். இதனை உண்மை என நம்பிய ஹரிகரசுதன் 3 தவணைகளாக ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்தை அந்த வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.


ஆனால் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தற்கான ஆவணங்கள் எதையும் அனுப்பி வைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை. மேலும் டெலிகிராம் செயலி மூலம் தகவல் கேட்க முயன்றபோது, ஹரிகரசுதனின் எண் பிளாக் செய்யப்பட்டு இருந்தது.


அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் அறிந்தார். இதையடுத்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த நபர் டெலிகிராமில் போலி கணக்கு தொடங்கி, ஹரிகரசுதனிடம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் ஹரிகரசுதன் பணம் செலுத்திய வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் இருப்பு இருந்தது. இதையடுத்து அந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். அதனை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஹரிகரசுதனிடம் வழங்கினார்.




Next Story