கோடநாடு வழக்கு: ஊட்டி கோர்ட்டில் அறிக்கை ஒப்படைப்பு


கோடநாடு வழக்கு: ஊட்டி கோர்ட்டில் அறிக்கை ஒப்படைப்பு
x

கோடநாடு வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் (24.4.2017) அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் உள்ளிட்ட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து மறு விசாரணை நடத்தப்பட்டது. தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கோடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக மாவட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சமர்பித்தனர். 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகளில் இருந்த விவரங்கள் 3 பென்டிரைவ்களில் மாற்றி அறிக்கையாக மூடி முத்திரையிட்ட கவரில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கில், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் ஆகியோரின் செல்போன்களை ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட விவரங்களும் சமர்பிக்கப்பட்டன. கோவையில் உள்ள தொழில்நுட்ப அலுவலகத்தில் 4 மாதங்களாக ஆய்வு செய்யப்பட்டது.


Next Story