அமணலிங்கேஸ்வரர் கோவிலில்மகாளய அமாவாசை சிறப்பு பூஜை


அமணலிங்கேஸ்வரர் கோவிலில்மகாளய அமாவாசை சிறப்பு பூஜை
x
திருப்பூர்


திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அமணலிங்கேஸ்வரர் கோவில்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.

அருவியில் குளித்து மகிழவும், மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர்.

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தை, புரட்டாசி மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அந்த வகையில் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை யொட்டி மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் வருகை தந்தனர். பின்னர் பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்துவிட்டு வந்து மும்மூர்த்திகள், விநாயகர், முருகன், சப்த கன்னிகளையும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு சில பொதுமக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து பிண்டம் வைத்து திதியும், தர்ப்பணமும் கொடுத்தனர். இதனால் பஞ்சலிங்க அருவி, கோவில் வளாகம், அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அத்துடன் வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அமாவாசையை யொட்டி போக்குவரத்து கழகத்தின் சார்பில் உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

1 More update

Next Story