பூண்டி ஏரியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு கிருஷ்ணா நீர் திருப்பி விடப்பட்டது


பூண்டி ஏரியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு கிருஷ்ணா நீர் திருப்பி விடப்பட்டது
x

பூண்டி ஏரிக்கு செல்லும் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு கிருஷ்ணா நீர் திருப்பி விடப்பட்டது.

சென்னை

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.

இ்ந்த திட்டத்தின்படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு, ஆந்திர அரசை கேட்டுக் கொண்டது.

அதன் பேரில் கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 152 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வந்தடைந்தது. வினாடிக்கு 20 கனஅடி விதம் வந்து கொண்டு இருந்தது.

கடந்த காலங்களில் பலத்த மழைக்கு ஜீரோ பாயிண்டில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. இந்த கரைகள் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்னும் 10 நாட்களில் பணிகள் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு அனுப்பி வைத்தால் கரைகள் சீரமைப்பு பணிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நீரை ஊத்துக்கோட்டை அருகே ஜங்காளபள்ளியில் உள்ள மதகுகள் வழியாக கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்துக்கு அனுப்பப்படுகிறது. கால்வாய் சீரமைப்பு பணி விரைந்து முடிந்ததும் உடனடியாக பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திருப்பி விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story