குமாரபாளையத்தில் பயங்கரம்:எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து கொலைநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு


குமாரபாளையத்தில் பயங்கரம்:எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து கொலைநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Oct 2023 7:00 PM GMT (Updated: 5 Oct 2023 7:00 PM GMT)

குமாரபாளையத்தில் எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எலக்ட்ரீசியன்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகரில் உள்ள லட்சுமி நாராயணா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 38). எலக்ட்ரீசியன். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றார். இதனால் கார்த்திகேயன் தனியாக வசித்து வந்தார். அவருடைய பெற்றோர் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள மதுக்கடையில் கார்த்திகேயன் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நண்பரான தனபால் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பும் ஆனதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் பேசி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

இந்த நிலையில், கார்த்திகேயன் இரவில் தனது வீட்டின் முன் கழுத்து அறுக்கப்பட்டு பயங்கரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குமாரபாளையம் ேபாலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கார்த்திகேயனின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான தனபாலை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட பின்னரே கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மது போதையில் எலக்ட்ரீசியன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

--------------


Next Story