கூலித்தொழிலாளி மர்ம சாவு
கூலித்தொழிலாளி மர்மான முறையில் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், தோகைமலை கழுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 43). விவசாய கூலித்தொழிலாளியான இவர், தற்போது பாதிரிபட்டி ஊராட்சி பள்ளிப்பட்டியில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி இரவு பழனிச்சாமி மது அருந்திவிட்டு வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை அவரது மனைவி எழுந்து பார்த்தபோது அவர் வாயில் நுரைதள்ளிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பழனிச்சாமியை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிச்சாமி மனைவி நாகலட்சுமி தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிச்சாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.