சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை; திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை; திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

பாலியல் பலாத்காரம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2016-ம் ஆண்டு மாயமானார். இது குறித்து சிறுமியின் தாயார் ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.

போலீசார் விசாரணையில் அந்த சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் ஆவடி, அடுத்த கன்னடபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான ஜெய்கணேஷ் (வயது 36) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

14 ஆண்டுகள் சிறை

இதனைத் தொடர்ந்து வழக்கு ஆவடி காவல் டேங்க் பேக்ட்ரி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஜெய்கணேசை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டமும் பாய்ந்தது.

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிபதி சுபத்ரா தேவி குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெய்கணேசுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து போலீசார் ஜெய்கணேசை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

1 More update

Next Story