திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:45 PM GMT)

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கள்ளக்குறிச்சி

சிறுமி பலாத்காரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி காலனி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி, கடந்த 2017-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இதற்காக அவர், தனது கிராமத்தில் இருந்து பஸ்சில் சென்று வந்தார்.

அப்போது அவருக்கும் கூத்தக்குடி பாண்டவர் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகனான கூலித்தொழிலாளி மணிகண்டன் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த அவர்கள் பின்னர் ஒருவரையொருவர் காதலித்தனர். அப்போது மணிகண்டன், அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். பின்னர் அந்த சிறுமி, மணிகண்டனிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றி விட்டார்.

தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.


Related Tags :
Next Story