காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்


காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:45 PM GMT)

பண்ருட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடலூர்

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே மேலிருப்பு கிராத்தில் உள்ள வெள்ளவாரி ஓடையின் குறுக்கே பல லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி, கடந்த 2½ ஆண்டாக நடக்கிறது. எனவே இருபுறமும் உள்ள கிராம மக்கள் சென்று வரும் வகையில் வெள்ளவாரி ஓடையின் குறுக்கே தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் வெள்ளவாரி ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு, அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

போக்குவரத்து துண்டிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி பகுதில் கன மழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம், வெள்ளவாரி ஓடையில் கரைபுரண்டு ஓடியது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாத தரைப்பாலம், 2-வது முறையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மேலிருப்பு, கருக்கை, செம்மேடு, ஏரிப்பாளையம், அங்குசெட்டிப்பாளையம், சிறுவத்தூர், மடப்பட்டு, கெடிலம், மேல் காங்கேயன்குப்பம், குடியிருப்பு, ஆத்திரிகுப்பம், அன்னங்காரகுப்பம் ஆகிய கிராமங்கள் உள்பட 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


Next Story