நில மோசடி புகார்: 4 ஆண்டுகளாக ஆஜராகாததால் சிங்கப்பூரை சேர்ந்தவருக்கு பிடிவாரண்டு - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு


நில மோசடி புகார்: 4 ஆண்டுகளாக ஆஜராகாததால் சிங்கப்பூரை சேர்ந்தவருக்கு பிடிவாரண்டு - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு
x

நில மோசடி புகாரில் 4 ஆண்டுகளாக ஆஜராகாததால் சிங்கப்பூரை சேர்ந்தவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

செங்கல்பட்டு

சென்னை சேலையூரை சேர்ந்தவர் வைரவநாதன். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் கிராமத்தில் 1.43 ஏக்கர் நிலத்தை கடந்த 2007-ம் ஆண்டு வாங்கி செங்கல்பட்டு பத்திர பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் தனது நண்பர் மோகன் என்பவரிடம் சொத்து ஆவணங்களை நம்பிக்கையின்பேரில் கொடுத்துள்ளார். இந்த நிலையில், வைரவநாதனின் சொத்துக்களை போலி ஆவணங்களை தயாரித்து மோகன் தனது பெயரில் கடந்த 2013-ம் ஆண்டு பவர் வாங்கியது வைரவநாதனுக்கு தெரியவந்தது. மேலும், இந்த சொத்தை சிங்கப்பூரில் உள்ள தவராஜன் என்பவருக்கு மோகன் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மோகன், அவரது டிரைவர் கவிக்குமார், சொத்தை வாங்கிய தவக்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வைரவநாதன் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காஞ்சீபுரம் நில அபகரிப்பு பிரிவு போலீசார் மோகன் உள்ளிட்டோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு 2-வது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் தவராஜன் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகவில்லை. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும், தவராஜன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி உத்தரவிட்டார்.


Next Story