வெயில் வாட்டி வதைப்பதால் திருப்பூரில் எலுமிச்சை விலை உயர்வு


வெயில் வாட்டி வதைப்பதால் திருப்பூரில் எலுமிச்சை விலை உயர்வு
x

வெயில் வாட்டி வதைப்பதால் திருப்பூரில் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.

திருப்பூர்

வெயில் வாட்டி வதைப்பதால் திருப்பூரில் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.

எலுமிச்சம் பழம்

திருப்பூரில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்கும் வகையில் இளநீர், மோர், கம்பங்கூழ், பழரசம் போன்ற குளிர்பானங்களை நாடி செல்கின்றனர். இதேபோல், தர்பூசணி, முலாம்பழம், எலுமிச்சம் பழம் ஆகியவற்றையும் அதிகம் வாங்குகின்றனர்.

இதன் காரணமாக எலுமிச்சம்பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து எலுமிச்சை வரத்து அதிகம் இருக்கும். தற்போது அங்கிருந்து வரத்து குறைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் இருந்து எலுமிச்சம்பழம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் தேவை அதிகமாக இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரம் சூடுபிடித்து வருகிறது.

விலை உயர்வு

அந்த வகையில் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக எலுமிச்சம்பழத்தின் விலை அதிகரித்து வருகிறது. சாதாரண நாட்களில் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.70 முதல் ரூ.80 வரைக்கும் விற்பனை செய்யப்படும் நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ.140 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, வெயில் காலங்களில் இதன் விலை அதிகம் இருப்பது வாடிக்கை தான். ஆனாலும் தற்போது பெரிய அளவில் விலை உயரவில்லை. கடந்த காலங்களில் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.250 வரைக்கும் விற்பனையாகியுள்ளது. தற்போது உதிரியாக விற்பனை செய்யாமல் பெரும்பாலும் எடை அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.


Related Tags :
Next Story