சிறுத்தை நடமாட்டம்: மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


சிறுத்தை நடமாட்டம்: மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x

மயிலாடுதுறையில் 3-வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு கடந்த 2-ந்தேதி இரவு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். நேற்று முன்தினம் அதிகாலை மீண்டும் செம்மங்குளம் பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்கு வாய்க்காலில் சுற்றி திரிந்த பன்றியை கடித்ததால் அங்கு மீண்டு பதற்றம் அதிகரித்தது.

இந்த நிலையில் சிறுத்தையை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தினர். மேலும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தி இருந்தனர். இந்த சூழலில் சிறுத்தை நடமாட்டம் தென்படாததால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில் மயிலாடுதுறை, ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

சிறுத்தையை பிடிக்க வனத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும் என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறையில் 3-வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனைமலை புலிகள் காப்பக வன, வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை நடமாடிய பகுதிகளில் சென்சார் பொருத்திய கேமராக்களுடன் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், சிறுத்தையை பிடிக்க 3 ராட்சத கூண்டுகள், வலைகள் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.


Next Story