அரசியலமைப்பின் மாண்புகளைப் பாதுகாக்க உறுதியேற்போம் - மக்கள் நீதி மய்யம்


அரசியலமைப்பின் மாண்புகளைப் பாதுகாக்க உறுதியேற்போம் - மக்கள் நீதி மய்யம்
x

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளை போற்றுவது நம் கடமை என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

சென்னை,

இந்திய அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"ஜனநாயகம், இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மையை ஆணிவேராகக் கொண்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாளில், சாசன வரைவுக் குழுவின் தலைவராகச் செயல்பட்ட அண்ணல் அம்பேத்கரையும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளையும் போற்றுவது நம் கடமை.

மாநில உரிமைகள், சமூக நீதி, கருத்துச் சுதந்திரம், சகோதரத்துவம் என அனைத்தையும் அசைத்துப் பார்க்கும் அதிகார கும்பலிடமிருந்து அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பும் நமக்குண்டு.

அது சிதைந்துவிடாமல் தடுப்போம் என, சாதி, மதம், இனம், மொழி கடந்து, மனிதம் நேசிக்கும் அனைவரும் உறுதியேற்போம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story