காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் நூலகம்
காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை போலீஸ் சூப்பிரண்டு மனோகர் திறந்து வைத்தார்.
காரியாபட்டி,
காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை போலீஸ் சூப்பிரண்டு மனோகர் திறந்து வைத்தார்.
புதிய நூலகம்
காரியாபட்டி போலீஸ் நிலையத்தில், போலீசார் சார்பாக புதிதாக நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமை தாங்கி நூலகத்தை திறந்து வைத்தார். அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பேசியதாவது:-
காரியாபட்டி போலீஸ் நிலையம் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. போலீஸ்நிலையத்தின் சுற்றுச்சுவர்களில் திருக்குறள் எழுதப்பட்டும், பல்வேறு கலைகளை வரைபடமாகவும் சுவற்றில் வரைந்து சிறப்பு செய்துள்ளனர்.
போலீசாருக்கு பாராட்டு
இந்த பகுதியில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளும் இந்த நூலகத்தை பயன்படுத்தி பயன்பெறலாம். புதுமையான முறையில் நூலகத்தை தொடங்கிய போலீசாருக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மாலை நேர கல்வி மையத்தில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்வாணன், மனுநூல்நிலையம் பரதன், தொண்டுநிறுவனத்தை சேர்ந்த அழகர்சாமி, விக்டர், சிவகுமார், ஆசிரியர் பொன்ராம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி நன்றி கூறினார்.