தந்தை-4 மகன்களுக்கு ஆயுள் தண்டனை


தந்தை-4 மகன்களுக்கு ஆயுள் தண்டனை
x

தந்தை-4 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர்

கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தந்தை-4 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கூலித்தொழிலாளி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ்(வயது 67). இவருக்கு தமிழரசி என்கிற மனைவியும், சுந்தரபாண்டி, மருதுபாண்டி, கார்த்தி ஆகிய 3 மகன்கள். இவர்களில் கூலித்தொழிலாளியான சுந்தரபாண்டிக்கு திருமணம் ஆகி கயல்விழி என்கிற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியில் அன்பழகன் என்பவர் தனது மகன்கள் அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அழகுநிதி மற்றும் மகள் அன்பரசி ஆகியோருடன் வசித்து வந்தார்.

முன்விரோதம்

இந்த நிலையில் அன்பரசிக்கும், அதே பகுதியை சேர்ந்த கண்ணுசாமி மகன் கருப்புசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அன்பழகன் கண்டித்துள்ளார். அப்போது பவுன்ராஜ் குடும்பத்தினர், கருப்புசாமி குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதனால் பவுன்ராஜ் குடும்பத்தினருக்கும், அன்பழகன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ந் தேதி இரவு பவுன்ராஜ் தனது மகன்கள் மற்றும் மனைவியுடன் தனது வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அன்பழகன் தனது மகன்களான அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அழகுநிதி ஆகியோருடன் வந்து பவுன்ராஜ் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார்.

கத்தியால் குத்திக்கொலை

அப்போது அருள்நிதி, பவுன்ராஜை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனை தடுக்க வந்த சுந்தரபாண்டியை, அன்பழகன் மற்றும் அவரது மகன்கள் 4 பேரும் சேர்த்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர்.

இதில் சுந்தரபாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். மேலும் இந்த தகராறில் காயமடைந்த பவுன்ராஜ், கார்த்தி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தந்தை-4 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அழகுநிதி ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் நடந்து வந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு கோர்ட்டு நீதிபதி ராதிகா, குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த அன்பழகன் மற்றும் அவரது 4 மகன்கள் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.13 ஆயிரத்து 750 அபராத தொகையும் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story