கொளத்தூர் அருகே, ஏலச்சீட்டு தகராறில் விவசாயியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு


கொளத்தூர் அருகே, ஏலச்சீட்டு தகராறில்  விவசாயியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை   மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு
x

கொளத்தூர் அருகே ஏலச்சீட்டு தகராறில் விவசாயியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சேலம்

மேட்டூர்,

ஏலச்சீட்டு தகராறு

மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 50). இவருடைய மனைவி அலமேலு (45). இவர்களுடைய மூத்த மகன் நந்தகுமார் (25). இவர் குடும்பத்தின் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு போடப்பட்ட ஏலச்சீட்டை எடுத்துள்ளார்.

இது குறித்து அதே பகுதியை சேர்ந்த விவசாயி மயில்சாமி என்பவரின் மகன் இளையபெருமாள், நந்த குமாரின் தம்பியிடம் தகவல் தெரிவித்தார். இதன் காரணமாக நந்தகுமாருக்கும், இளையபெருமாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை இளையபெருமாளின் தந்தை மயில்சாமி தட்டி கேட்டார்.

இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார், அவருடைய தந்தை மகாதேவன், தாயார் அலமேலு, தங்கை முத்துலட்சுமி (23) ஆகியோர் சேர்ந்து மயில்சாமியை தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த மயில்சாமியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை சம்பவம் குறித்து, நந்தகுமார், மகாதேவன், முத்துலட்சுமி, அலமேலு ஆகிய 4 பேர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு மேட்டூரில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை முடிவில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட நந்தகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12 ஆயிரத்து 500 அபராதமும், மகாதேவனுக்கு ரூ.1,500 அபராதமும், அலமேலு, முத்துலட்சுமி ஆகிய இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நீதிபதி குமார சரவணன் தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குழந்தைவேலு ஆஜராகி வாதாடினார்.


Next Story