தமிழகத்தில் கள்ளச்சாராயம் இல்லை


தமிழகத்தில் கள்ளச்சாராயம் இல்லை
x
தினத்தந்தி 10 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 6:45 PM GMT)

தமிழகத்தில் கள்ளச்சாராயம் அறவே இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

சிவகங்கை

தமிழகத்தில் கள்ளச்சாராயம் அறவே இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

மரியாதை

சிவகங்கை அருகே கத்துப்பட்டு கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஒருவேளை அப்படி கள்ளுக்கடை திறந்தால் அதற்கு பின்பு சாராயக்கடைகளையும் திறக்க கூறுவார்கள்.

எனவே தமிழகத்தில் அதற்கான தேவை தற்போது இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதன் மூலம் வரும் வருவாய் அரசிற்கு ஒரு அத்தியாவசியமானதாக உள்ளது. மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது அறவே இல்லை. ஏதோ ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் கள்ளச்சாராயம் உள்ளது என மிகைப்படுத்தி பேசக்கூடாது.

ரூ.13 ஆயிரம் கோடி மானியம்

தமிழக மின்வாரியத்திற்கு கடந்த கால ஆட்சியின் போது ரூ.1½ லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு சென்றனர். மேலும் அப்போதைய ஆட்சியில் எவ்வித மானியமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக மின்சார துறைக்கு ரூ.13 ஆயிரம் கோடியை மானியமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். அதன்மூலம் கடந்த கால ஆட்சியின் போது மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் நஷ்டத்தை தற்போது அரசே தாங்கிபிடித்துள்ளது. மீண்டும் கடனில்லாத வாரியமாக மின்வாரியம் முதல்-அமைச்சரின் ஆட்சியில் இயங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story