பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.12 கோடிக்கு மதுவிற்பனை


பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.12 கோடிக்கு மதுவிற்பனை
x
தினத்தந்தி 17 Jan 2023 7:30 PM GMT (Updated: 17 Jan 2023 7:30 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.12 கோடிக்கு மது விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டை விட ரூ.50 லட்சம் அதிகம் ஆகும்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.12 கோடிக்கு மது விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டை விட ரூ.50 லட்சம் அதிகம் ஆகும்.

ரூ.12 கோடிக்கு மதுவிற்பனை

சமீபகாலமாக பண்டிகை கால கொண்டாட்டங்களில் மது முக்கிய இடம் பிடித்து வருகிறது. அதன் காரணமாக பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கமாகி உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் டாஸ்மாக் கடைகளிலும் தேவையான அளவு மதுபான பாட்டில்கள் இருப்பு வைக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 188 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் கடந்த 14, 15-ந் தேதிகளில் 2 நாட்கள் மது விற்பனை அமோகமாக நடந்தது. பெரும்பாலான கடைகளில் குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மது வாங்குவதை பார்க்க முடிந்தது. இந்த 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ.12 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.

விற்பனை அதிகரிப்பு

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் சாதாரண நாட்களில் சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.3½ கோடி வரை மதுபானம் விற்பனையாகும். கடந்த 14-ந் தேதி சுமார் ரூ.6½ கோடிக்கும், 15-ந் தேதி ரூ.5½ கோடிக்கும் மதுபானம் விற்பனையாகி உள்ளன என்றனர்.

காணும் பொங்கலை யொட்டி நேற்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை சூடுபிடித்தது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் ரூ.11¼ கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. அதை விட இந்த ஆண்டு ரூ.50 லட்சம் கூடுதலாக மது விற்பனை ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story