3 நாட்களில் ரூ.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை


3 நாட்களில் ரூ.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
x

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி 3 நாட்களில் ரூ.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

ஆயுதபூஜை பண்டிகை

ஆயுதபூஜை பண்டிகை கடந்த 23-ந் தேதியும், விஜயதசமி 24-ந் தேதியும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுப்பிரியர்கள் தங்கள் நண்பர்களுடன் மதுஅருந்தி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

மாலை முதல் விற்பனை நேரம் முடியும் வரை ஏராளமான மதுப்பிரியர்கள் கடைகளின் முன்பு குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்கி உற்சாகத்துடன் சென்றனர். அதனால் வழக்கத்தை விட கூடுதலாக மது, பீர் வகைகள் விற்பனையாகின.

ரூ.19 கோடிக்கு விற்பனை

வேலூர் டாஸ்மாக் கோட்டம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 106 டாஸ்மாக் கடைகளில் கடந்த 22,23,24 ஆகிய 3 நாட்களில் ரூ.11 கோடியே 56 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.3 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும். இந்த 3 நாட்களில் சராசரியாக ரூ.3 கோடியே 85 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று அரக்கோணம் டாஸ்மாக் கோட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 83 டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.7 கோடியே 34 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. இங்கு மற்ற நாட்களில் ரூ.2 கோடி வரை விற்பனையாகும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி 3 நாட்களில் மொத்தம் ரூ.18 கோடியே 90 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story