கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை


கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை
x

கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 50-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், தேனி, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 300 பசுமாடுகள், 350 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும் விலை போனது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள். இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'நேற்று கூடிய சந்தையில் மாடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. இதன் காரணமாக 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனது' என்றனர்.


Next Story