சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்


சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
x

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

கடன் உதவி

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன் சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன்கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

அதிக பட்சமாக

திட்டம் 1-ன்கீழ் தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம் பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுக்கு 5 சதவீத பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

சுயஉதவி குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது.

மேலும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும் திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீத மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, இந்த மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் போன்ற சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மதத்திற்கான சான்று

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் போன்ற அவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story