பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவு


பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவு
x

பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர்

பள்ளி பஸ்கள் ஆய்வு

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச்செல்ல பயன்படுத்தப்படும் பஸ்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் தரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:- 2012-ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி வாகனங்கள் சாலையில் செல்ல தகுதியாக உள்ளதா, சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதையும், நோய் தொற்றுகள் எவ்விதத்திலும் பரவாமல் உள்ளதா எனவும் பார்வையிடப்பட்டுள்ளது. இதில் 82 பள்ளிகளின் 451 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தகுதியில்லாத வாகனங்கள்

கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு சுகாதாரமாக உள்ளதா என்பதையும், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, தீயணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி போன்றவைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பஸ்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது சரியாக இல்லாத பஸ்களை உடனடியாக விதிகளின்படி சரிசெய்வதற்கும், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாததாக கருதப்படும் வாகனங்களை ரத்து செய்யவும் வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீ தடுப்பு ஒத்திகைமேலும் வாகனம் ஓட்டும்போது மது போதையில் இருக்கக்கூடாது. கண், செவித்திறன் மற்றும் வேறு ஏதேனும் மருத்துவ உபாதைகள் உள்ளதா என்பதை பரிசோதித்து, ஒழுக்கமுடன் சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் பள்ளி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ தடுப்பு ஒத்திகை செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் சந்திரகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story