நாமக்கல் மாவட்டம் முழுவதும்பிப்ரவரி 11-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்


நாமக்கல் மாவட்டம் முழுவதும்பிப்ரவரி 11-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
x
தினத்தந்தி 9 Jan 2023 6:45 PM GMT (Updated: 9 Jan 2023 6:45 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், பரமத்தி சார்பு நீதிமன்றம், சேந்தமங்கலம், குமாரபாளையம் நீதிமன்றங்களில் பிப்ரவரி மாதம் 11-ந் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றத்தில் முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் யாருக்காவது நீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story