திருவள்ளூரில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம்- கலெக்டர் தகவல்


திருவள்ளூரில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம்- கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக 7-ந்தேதி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் பந்தயம் நடைபெற உள்ளன.

திருவள்ளூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் பந்தயம் நடைபெற உள்ளன.

இதில் 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களில் ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் முதலிடத்தை பெறும் வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதமும், 2-ம் இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் வீதமும், 3-ம் இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதமும், 4-ம் இடம் முதல் 10-ம் இடம் வரை பெறும் ஒவ்வொரு வீரர் வீராங்கனைகளுக்கும் ரூபாய் ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ- மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும் வருகின்ற இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்து மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வழங்கப்படும் மருத்துவ தகுதி சான்றிதழ்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கின் முதல் பக்கத்தின் நகல், வயது சான்றிதழ், ஆதார் கார்டு ஆகியவைகளை சமர்ப்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story