திருப்பரங்குன்றம், சோலைமலையில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான்


திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி திருவிழாவில் நேற்று முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்தார்.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி திருவிழாவில் நேற்று முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்தார்.

கந்தசஷ்டி திருவிழா

முருகப் பெருமான் குடிகொண்டு எழுந்தருளும் அறுபடைவீடுகளில் முதல் படைவீடு என்ற பெருமை கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் 7 நாட்கள் கந்தசஷ்டி திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவில் நேற்றுமுன்தினம் வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி முருகப் பெருமானுக்கு "சம்ஹாரஅலங்காரம்" செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

சக்திவேலால் சம்ஹாரம்

இதனை தொடர்ந்து முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். அதில் காப்பு கட்டி விரதம் இருந்த முருகப் பெருமானின் பிரதியாக ஸ்தானிக பட்டர் வந்தார். இதனையடுத்து முருகப்பெருமானின் போர்படை தளபதியான வீரபாகு தேவர் வெள்ளை குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். அப்ேபாது சூரபத்மன் மனித முகமாக, சிங்கமுகமாக, ஆட்டு கிடாவாக மாறி, மாறி உருவெடுத்தார். இதேவேளையில் முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் பெற்ற "சக்திவேல்" கொண்டு நான்கு திசையிலும் எட்டு திக்குமாக சூரபத்மனை ஓட, ஓட துரத்தினார். இறுதியில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு முருகப் பெருமான் சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்தார். வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா, வீரவேல்முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

மாலை மாற்றுதல்

இதனையடுத்து முருகப்பெருமான் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதிக்கு சென்றார். அங்கு முருகப் பெருமான், தெய்வானைக்கு மாலை மாற்றி தீபாராதனை நடந்தது. பின்னர் தெய்வானையுடன் முருகப் பெருமான் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று(திங்கட்கிழமை) சட்டத் தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனம் நடக்கிறது.

சோலைமலை முருகன் கோவில்

மதுரை அழகர்மலை உச்சியில் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. காலையில் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. மாலையில் வேல் வாங்குதல் நடைபெற்றது. பின்னர் 5.35 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது.

இதில் சுப்பிரமணிய சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடாகி கோவிலின் ஈசான திக்கில் வந்த கஜமுகா சூரனையும், அக்கினிதிக்கில் வந்த சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து அங்குள்ள தல விருட்ஷமான நாவல் மரத்தடியில், பத்மா சூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மாலையில் சாந்தாபிஷேகமும், தீபாராதனையும். பின்னர் அவ்வைக்கு நாவல் கனி கொடுத்தல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story