ரெயில் மோதி லாரி டிரைவர் பலி


ரெயில் மோதி லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 18 Jun 2023 7:00 PM GMT (Updated: 19 Jun 2023 7:02 AM GMT)

நெல்லையில் ரெயில் மோதி லாரி டிரைவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி

நெல்லையில் ரெயில்மோதி லாரி டிரைவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லாரி டிரைவர்

நெல்லை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ். இவரது மகன் ஜேக்சன் (வயது 36). லாரி டிரைவரான இவர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் மேட்டுத்தெருவில் மனைவி ராஜலட்சுமியுடன் வசித்து வந்தார்.

ராஜலட்சுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஜேக்சன் அவ்வப்போது என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து சென்றார்.

ரெயில் மோதியது

இந்த நிலையில் நேற்று காலையில் பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்காக ஜேக்சன் மகாராஜநகர் ரெயில்வே கேட் பகுதிக்கு வந்தார். அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் ஜேக்சன் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ராமகிருஷ்ணன், முத்தமிழ் செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்சன் ரெயில் மோதி உயிர் இழந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story