பெரியகுளம் அருகே காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை


தினத்தந்தி 5 Aug 2023 9:30 PM GMT (Updated: 5 Aug 2023 9:31 PM GMT)

பெரியகுளம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி

பெரியகுளம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கூலித்தொழிலாளி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் வேலவர். இவரது மகன் மாரிமுத்து (வயது 22). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார் மகள் மகாலட்சுமி (15). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். மாரிமுத்துவுக்கும், மகாலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்தது. இதையடுத்து 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மாரிமுத்துவும், மகாலட்சுமியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாரிமுத்துவும், மகாலட்சுமியும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர். தங்களை பிரித்துவிடுவார்கள் என்று எண்ணிய அவர்கள், சேர்ந்து தான் வாழ முடியவில்லை, ஒன்றாக சேர்ந்து சாகலாம் என முடிவு செய்தனர்.

காதல் ஜோடி தற்கொலை

அதன்படி, நேற்று முன்தினம் இரவு தங்களது வீடுகளை விட்டு வெளியேறிய மாரிமுத்துவும், மகாலட்சுமியும் காந்திநகர் அருகில் உள்ள மாந்தோப்புக்கு சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் 2 பேரும் ஒன்றாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதற்கிடையே வீடுகளை விட்டு வெளியே சென்ற மாரிமுத்துவையும், மகாலட்சுமியையும் அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை காந்திநகர் அருகே உள்ள மாந்தோப்பில் ஒரு மரத்தில் மாரிமுத்துவும், மகாலட்சுமியும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். உடனடியாக இதுகுறித்து பெரியகுளம் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள் உதவியுடன் தூக்கில் தொங்கிய காதல் ஜோடியின் உடல்களை கீழே இறக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காதல் ஜோடியின் பெற்றோர்கள், உறவினர்கள் அங்கு வந்தனர். அப்போது அவர்கள், மாரிமுத்து மற்றும் மகாலட்சுமியின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story