ஒகேனக்கல்லுக்கு 1.15 லட்சம் கனஅடியாக குறைந்த நீர்வரத்து


ஒகேனக்கல்லுக்கு 1.15 லட்சம் கனஅடியாக குறைந்த நீர்வரத்து
x

கோப்புப்படம் 

இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

பென்னாகரம்,

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தொட்டபெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நடைபாதையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. வெள்ளப்பெருக்கால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

காவிரி கரையோர பகுதிகளான ஆலம்பாடி, ஊட்டமலை, நாகர்கோவில், முதலைப்பண்ணை மற்றும் அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story