எழுத்தாளர் மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது


எழுத்தாளர் மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது
x

எழுத்தாளர் மாலன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற நாவலுக்கு 2021-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் படைப்புகளுக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு புத்தகங்களுக்கான விருதுகள் விவரம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநில மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியான மொழி பெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.

தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் மாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி, பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி ஆங்கிலத்தில் எழுதிய நாவல் 2015-ம் ஆண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய புத்தகத்துக்கான சாகித்ய அகாடமி பிரதான விருதை பெற்றுள்ளது. அந்த நாவலை, 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' என்ற தலைப்பில் மாலன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த படைப்பு சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்துக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


Next Story