தீவுத்திடலை சுற்றி 'பார்முலா-4' கார் பந்தயம் நடத்த தடை இல்லை - ஐகோர்ட்டு தீர்ப்பு


தீவுத்திடலை சுற்றி  பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடை இல்லை - ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Feb 2024 8:00 PM GMT (Updated: 19 Feb 2024 8:00 PM GMT)

கார் பந்தயத்துக்காக அரசு செலவிட்டுள்ள ரூ.42 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

சென்னை,

சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலை மார்க்கமாக கடந்த ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து தெற்காசியாவில் முதன்முறையாக இரவுநேர 'பார்முலா-4' கார் பந்தயம் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டது. சென்னை மாநகருக்குள் எந்த பகுதியிலும் இந்த பந்தயத்தை நடத்தக்கூடாது என தடை விதிக்கக்கோரியும், இந்த பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு மாற்றக்கோரியும் டாக்டர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தபோது, மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பால் இந்த கார் பந்தயத்தை அரசு தள்ளிவைத்தது. இந்த கார் பந்தயத்தை வரும் ஜூன் மாதத்துக்கு பின்னர் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச அளவிலான கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளை ஊக்குவி்க்கும் நோக்கில் இந்த கார் பந்தயத்தை நடத்த தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே சென்னை தீவுத்திடலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் 'பார்முலா-4' கார் பந்தயத்தை நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள எந்த தடையும் கிடையாது. எந்தெந்த தேதிகளில் இந்த பந்தயத்தை நடத்துவது என்பதை அரசே முடிவு செய்து கொள்ளலாம். அதேநேரம் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றியுள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

கார் பந்தயம் ஆஸ்பத்திரி பகுதியில் நடைபெறும்போது ஒலி மாசுவை வெகுவாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை தனியார் நிறுவனமும், அரசும் எடுக்க வேண்டும். மேலும், இந்த கார் பந்தயத்தை பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் நடத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கார் பந்தயத்துக்காக அரசு செலவிட்டுள்ள ரூ.42 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும். இந்த பந்தயத்துக்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல எதிர்வரும் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பந்தயத்தை நடத்திக்கொள்ள ரூ.15 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அரசுக்கு டெபாசிட் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Next Story