நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டம்..!! - கோவை ஈஷா யோகா மையத்தில் ஜனாதிபதி பங்கேற்பு


நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டம்..!! - கோவை ஈஷா யோகா மையத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Feb 2023 5:39 PM GMT (Updated: 18 Feb 2023 8:49 PM GMT)

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றுள்ளார்.

கோவை,

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்றுவரும் மகா சிவராத்திரி விழாவில் அரசியல் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

ஈஷா மையத்தில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.


முன்னதாக ஈஷாவுக்கு வந்தவுடன் தீர்த்த குளத்தை பார்வையிட்ட திரவுபதி முர்மு, அங்கு கால் நனைத்து, தியான பீடத்தில் வழிபட்டார். நாளை உதகை வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களிடையே உரையாற்றுகிறார்.

இதனிடையே கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது ஆதியோகி சிலை முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


மகா சிவராத்திரி

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்!

சிவராத்திரியையொட்டி இன்று நாள் முழுவதும் விரதமிருந்து, சிவபுராணம் படிப்பதுடன் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபடுகின்றனர். மகாசிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர், காஞ்சி ஏகாம்பரேஸ்வர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிவராத்திரியை முன்னிட்டு இன்று பகல் மற்றும் இரவு முழுவதும் சிவன் கோவில்களில் நடை திறந்திருக்கும். இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இன்று சனி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வந்துள்ளதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

மகா சிவராத்திரி - நடராஜர் கோவிலில் கோலாகலம்

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

தஞ்சை பிரகதீஷ்வரர் கோயிலில் களைகட்டிய மகா சிவராத்திரி உற்சவம்


சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும். சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம். எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர்கள் நன்மை பெறுவார்கள்.

Live Updates

  • 18 Feb 2023 8:45 PM GMT

    ஈஷா யோகா மையத்தில் களைகட்டிய மகா சிவராத்திரி விழா



     ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் நாடு முழுவதிலிருந்தும் அரசியல், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.




     



  • 18 Feb 2023 8:37 PM GMT

    தஞ்சை பிரகதீஷ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழாவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



    மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிவபெருமானுக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.



     


  • 18 Feb 2023 7:37 PM GMT

    பெங்களூருவில் மகா சிவராத்திரி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சிறப்பு பூஜை



    பெங்களூருவில் நேற்று இரவு முதல் மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனின் அருளை பெற்று சென்று வருகின்றனர். மல்லேசுவரத்தில் காடு மல்லேசுவரம் கோவில் உள்ளது. 17-ம் நூற்றாண்டை சார்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும்.

    நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் அதிகாலை முதலே விஷேச பூஜைகள் நடைபெற்றன. கோவில் முகப்பு பகுதியில் பூக்களால் ஆன 15 அடி உயர சிவ லிங்கம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை தரிசித்து சென்றனர்.

    மேலும் பல்வேறு கோவில்களில் நேற்று விஷேச பூஜைகள், இரவு 4 கால பூஜைகள் நடைபெற்றன. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலரும் விரதம் இருந்து சிவனின் அருளை பெற்று சென்றனர்.

    இந்நிலையில் பெங்களூரு மையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    இந்த மகா சிவராத்திரி சிறப்பு பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பங்கேற்றார். 



  • 18 Feb 2023 6:41 PM GMT

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலம் 


    சென்னை,

    மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவிலில், 'மயிலையில் சிவராத்திரி' என்ற பெயரில் இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வறுகின்றன.

    இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நேற்று மாலை 6 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி, இன்று காலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக வண்ண ஒளி விளக்கு அலங்காரங்களுடன் கூடிய பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு, ஆன்மிகம் சார்ந்த கலை நிக்ழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு நிகழ்ச்சியினைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.


Next Story