மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
x

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்து உள்ளார்.

நாமக்கல்

படைப்புழு தாக்குதல்

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் அனைத்து வட்டாரங்களிலும் மக்காச்சோளம் 5,346 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் 30 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும்.

எனவே உரிய நேரத்தில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகள் பயன் அடையலாம். குறிப்பாக அமெரிக்கன் படைப்புழு, தாய் அந்துப் பூச்சிகள் உள்ளதா? என கண்காணிக்க விதைத்தவுடன் இனக்கவர்ச்சி பொறிகள் ஹெக்டேருக்கு 5 வீதம் வைத்து கண்காணித்து பொருளாதார சேத நிலை அதிகமாகும் போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

பூச்சிக்கொல்லி பொருளாதார சேத நிலையினை கடந்து அதிகரிக்கும் பட்சத்தில் விதைத்த 15 முதல் 20 நாட்களில் அசாடிராக்டின், குளோரன்ட்ரனிலிப்ரோல், புளுபென்டமைடு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

கைத்தெளிப்பான்

மேலும் விதைத்த 40 முதல் 45 நாட்களில் தாக்குதல் தென்பட்டால் இமாமெக்டின் பென்சோயேட், ஸ்பைன்டோரம் நாவாலூரான் அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலியே ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 60-ம் நாள் தேவைப்பட்டால் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் மேற்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம். இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தையும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கடைபிடித்து மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story