மாமல்லபுரம் இருளர், நரிக்குறவர்களுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்


மாமல்லபுரம் இருளர், நரிக்குறவர்களுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்
x

மாமல்லபுரம் இருளர், நரிக்குறவர்களுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்து ஊடகங்களில் வந்த செய்திகள் தொடர்பாக சரியான தகவல்கள் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை ரூ.1½ கோடி செலவில் நலத்திட்ட உதவிகள் பூஞ்சேரி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 54 இலவச வீட்டு மனை பட்டாக்கள், 35 ஜாதி சான்றிதழ்கள், 6 பேருக்கு முதியோர் உதவித்தொகை, வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன்கார்டுகள வழங்கப்பட்டுள்ளன.

வங்கிகள் மூலம் கடனுதவி தேவைப்பட்ட 12 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வீதமும் அஸ்வினி சேகர் என்பவருக்கு ரூ.5 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வங்கி கடன் ஆணைகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அஸ்வினி சேகர் ரூ.5 லட்சம் கடன் உதவி கோரியதன் பேரில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தயார் நிலையில் இருந்தும், தன்னுடைய ரூ.5 லட்சத்திற்கான கடன் வழங்கும் ஆணையை அனைத்து நபர்களுக்கும் ஒன்றாக வழங்கும் போது தான் பெற்றுக்கொள்வதாக தெரிவித்து வங்கி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர நபர்களுக்கும் ஆணைகள் வழங்கப்படுவது நிலுவையில் உள்ளது.

அஸ்வினி சேகர் மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் சொந்தமாக கடை வைத்து நடத்திட இட ஒதுக்கீடு கோரியதன் பேரில் ஜூலை மாதத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் தகுந்த கடைகள் வழங்க உத்தரவிட்டதன் பேரில் கடற்கரை பகுதி ஐந்து ரதம் பகுதி போன்ற இடங்களில் கடை வழங்க ஏதுவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அஸ்வினி சேகர் கூறியவாறு கடை இருப்பிடம் அமையவில்லை. அவர் குறிப்பிட்டு கேட்கும் கடை ஏற்கனவே ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இநத நிலையில் கடந்த 17-ந்தேதி அன்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமம் மூலம் உடனடியாக கடை ஒதுக்க ஆணையிடப்பட்டு கடந்த 18-ந்தேதி காலை கடை எண் 66 ஒதுக்கீடு செய்ய இருந்த நிலையில் அதனையும் அவர் நிராகரித்து விட்டார்.

மேலும் புதிதாக வழங்கப்பட்ட இடங்களில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 22 நபர்களுக்கு வீடு கட்டி கொள்வதற்கான ஆணை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதியில் வசித்து வரும் 55 குடும்பத்தினருக்கு கழிவறை கட்டிடம் கட்டி கொள்ள பேரூராட்சிகள் ஆணையர் மூலம் 27.7.2022 அன்று நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு ஒப்பந்ததாரர் மூலம் வீடுகள் கட்டப்படுவதை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளுக்கும் அந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு பெறுவதற்கும் துறை அலுவலர்கள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி கிராமத்தில் இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1½ கோடி மதிப்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவர்களுக்கு வழங்க தயாராக உள்ள நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அந்த பகுதி மக்களின் ஒப்புழைப்பை பெற செங்கல்பட்டு மாவட்ட துணை கலெக்டர் நேரடியாக சென்று விவரங்களை எடுத்து கூறி உதவிகளை வழங்குதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story