தீ வைத்து கொலை செய்த வழக்கில் லேப் டெக்னிஷியனுக்கு ஆயுள் தண்டனை


தீ வைத்து கொலை செய்த வழக்கில் லேப் டெக்னிஷியனுக்கு ஆயுள் தண்டனை
x

செங்கல்பட்டில் தீ வைத்து கொலை செய்த வழக்கில் லேப் டெக்னிஷியனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

செங்கல்பட்டு

கள்ளத்தொடர்பு

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியைச்சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி ஜமுனா. அதே பகுதியைச்சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர், மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். ராஜா பணியாற்றி வந்த அதே ஆஸ்பத்திரியில் ஆனந்த் தனது மனைவி ஜமுனாவை லேப் டெக்னிசியன் பணிக்கு வேலைக்கு சேர்த்துள்ளார். ஒரே இடத்தில் பணியாற்றி வந்த ராஜாவுக்கும், ஜமுனாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ஆனந்த், மனைவி ஜமுனாவை கண்டித்தார். அதன்பிறகு ராஜாவுடன் பேசுவதை ஜமுனா நிறுத்திவிட்டார்.

எரித்துக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த ராஜா, மருத்துவத்துக்கு பயன்படும் ரசாயனத்தை ஜமுனா மீது ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்தார். இதில் படுகாயம் அடைந்த ஜமுனா, சென்னை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி ஜமுனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் 2018-ம் ஆண்டு நடந்தது. இதுதொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் கொலை, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, குற்றவாளியான ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.


Next Story