தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது


தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது
x

செங்கம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்புடைய கணவன்- மனைவியை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

செங்கம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்புடைய கணவன்- மனைவியை தேடி வருகின்றனர்.

தீபாவளி சீட்டு

செங்கம் தாலுகா அன்வராபாத் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி காயத்திரி. செங்கம் அருகில் புதிய குயிலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. இவர்கள் 3 பேரும் சேர்ந்த தீபாவளி சீட்டு நடத்தி வந்து உள்ளனர்.

இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு செங்கம் தாலுகா குப்பனத்தம் கிராமத்தை சேர்ந்த அனுசுயா (வயது 31) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இவரை அணுகிய அவர்கள் உங்களுடைய உறவினர்களையும், நண்பர்களையும் தீபாவளி சீட்டில் சேர்த்து விட்டால் அதற்கு கமிஷன் பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளனர்.

அதற்கு அனுசுயா கமிஷன் எதுவும் வேண்டாம் என கூறி அவர்கள் 3 பேரின் பேச்சையும் நம்பி உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கூறியதால் அந்த சீட்டில் 450 பேர் இணைந்தனர்.

இவர்களிடம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு நபருக்கு ரூ.450 வீதம் மாதத்திற்கு ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 500 என 12 மாதத்திற்கு மொத்தம் ரூ.24 லட்சத்து 30 ஆயிரம் கட்டியதாகவும், இதற்கு ராஜ்குமார், அவரது மனைவி காயத்திரி, அன்பு ஆகியோர் தீபாவளி சீட்டு நோட்டு புத்தகத்தில் கையொப்பம் செய்து பணம் வசூல் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சீட்டு முதிர்வு காலம் முடிந்து சீட்டு கட்டிய நபர்களுக்கு அவர்கள் உரிய பொருட்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஒருவர் கைது

இதை போன்று அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த செல்வி என்பவருக்கு ரூ.9 லட்சத்து 12 ஆயிரமும், பரமனந்தல் கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவருக்கு ரூ.4 லட்சத்து 2 ஆயிரமும், புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த செவ்வந்தி என்பவருக்கு ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் கொடுக்க வேண்டியது அனுசுயாவிற்கு தெரியவந்தது.

இதுகுறித்து அனுசுயா தீபாவளி சீட்டு நடத்தி பணம் பெற்ற ராஜ்குமார், காயத்திரி, மற்றும் அன்பு ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவா்களிடம் இருந்து ரூ.38 லட்சத்து 58 ஆயிரத்தை மீட்டு தர வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்புவை கைது செய்தனர்.

மேலும் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி காயத்திரியை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story