மஞ்சளாறு அணை 55 அடியை எட்டியது


மஞ்சளாறு அணை 55 அடியை எட்டியது
x
தினத்தந்தி 17 Oct 2023 12:30 AM GMT (Updated: 17 Oct 2023 12:30 AM GMT)

தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை 55 அடியை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி

தேவதானப்பட்டி அருகே 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து நேற்று முன்தினம் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 54.95 அடியாக இருந்தது. பழைய ஆயக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 60 கன அடி வீதமும், புதிய ஆயக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 40 கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன், நீர்மட்டம் 55 அடியை எட்டியது. பொதுவாக மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதும் முதற்கட்டமாகவும், 53 அடியை எட்டியதும் 2-ம் கட்டமாகவும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்டமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது வழக்கம். அதன்படி, நீர்மட்டம் 55 அடியை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சளாற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 126 கன அடியாக உள்ளது. இந்த தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.


Next Story