செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்


செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்
x

திருப்பூரில் பழ குடோன்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.

திருப்பூர்

திருப்பூரில் பழ குடோன்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.

2 டன் மாம்பழங்கள் பறிமுதல்

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ரவி, தங்கவேல், கேசவராஜ், பாலமுருகன், கோடீஸ்வரன், சிரஞ்சீவி, ரகுநாதன், விஜயகுமார் ஆகியோர் 3 குழுவாக பிரிந்து திருப்பூர் மாநகர மாம்பழ குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி கே.எஸ்.சி. பள்ளி வீதி, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி, பழ குடோன் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லறை விற்பனை குடோன்களில் நேற்று காலை திடீர் ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வின்போது, 4 குடோன்களில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன 2 டன் எடையுள்ள மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இந்த மாம்பழங்களின் மொத்த மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். 12 மொத்த விற்பனை கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகளை வைத்திருந்த கடைக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

செயற்கை முறையில் பழுக்க வைத்தல்

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

மாம்பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும். எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படி செய்து மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு அனுமதியில்லை.

சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே பழங்களை பழுக்க வைக்க வேண்டும். அதேபோல் கால்சியம் கார்பைடு அசிட்டலின் போன்ற ரசாயனங்களை வைத்து செயற்கையான முறையில் பழுக்க வைக்கக்கூடாது.

இவ்வாறு ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடும்போது தோல் அலர்ஜி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும். ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் தோல்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உட்பகுதி காயாக இருக்கும். பழச்சாறு அளவு குறைவாக இருக்கும். பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும். சுவை குறைவாகவே இருக்கும். மாம்பழ விற்பனையாளர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு கலப்படம் மற்றும் தரம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story