தர்மபுரியில்போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான்


தர்மபுரியில்போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான்
x
தினத்தந்தி 15 Oct 2023 7:00 PM GMT (Updated: 15 Oct 2023 7:01 PM GMT)

தர்மபுரியில் போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

தர்மபுரி

தர்மபுரியில் எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி தொடக்க விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி கவர்னர் ராகவன் முன்னிலை வகித்தார். துணை கவர்னர் விக்ரமன் வரவேற்றார். போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியாக போட்டி நடைபெற்றது. 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட எல்லை வகுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.என்.சி.இளங்கோவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, கிருஷ்ணா சில்க்ஸ் உரிமையாளர் பாலு, எலைட் ரோட்டரி சங்க தலைவர் ஸ்ரீதர், செயலாளர் விஜய் சங்கரன், பொருளாளர் டாக்டர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.


Next Story