மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்


மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
x

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று தேரோட்டம் நடக்கிறது.

கரூர்

வைகாசி திருவிழா

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்தவகையில் இந்த ஆண்டு கடந்த 14-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.

திருவீதி உலா

அதன் பிறகு தினமும் பக்தர்கள் புனிதநீர், பால் மூலம் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. அப்போது கரூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து 47 பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கடந்த 21-ந்தேதியில் இருந்து தினமும் ரிஷப, புலி, பூத, வெள்ளி சிம்ம, வெள்ளி அன்ன, சேஷ, யானை, குதிரை, காமதேனு, கெஜலட்சுமி, புஷ்பவிமானம், கருட, மயில், கிளி, வேப்பமர, பின்னமர உள்ளிட்ட வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

மாவிளக்கு

இந்நிலையில் நேற்று மாவிளக்கும், பால்குடமும் எடுத்து வரும் விழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை முதலே கரூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கினர். அப்போது பக்தர்கள் பால்குடம் மற்றும் மாவிளக்குடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள கம்பத்திற்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தும், மாவிளக்கு பூஜை செய்தும் சாமி தரிசனம் செய்தனர்.

இதில் கரூர், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, காந்திகிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சாமி திருவீதியுலா நடைபெற்றது.

அக்னி சட்டி எடுத்தல்

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி காலை 7.05 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளைமறுதினங்களில் (புதன்கிழமை) மாவிளக்கும், பால்குடமும் நடக்கிறது. இதேபோல் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது. 31-ந்தேதி (புதன்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா நடக்கிறது.


Next Story