75-வது சுதந்திர தின விழா: தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி


75-வது சுதந்திர தின விழா: தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி
x

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் 8 கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

ராமேஸ்வரம்:

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதுபோல் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் உள்ள முக்கிய இடங்களில் குறிப்பாக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் கூடுதலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்திற்கு சொந்தமான 4 ஹோவர்கிராஃப்ட் கப்பலும் மற்றும் 2 அதிவேக கப்பலும் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதை தவிர சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான அதிநவீன கப்பல் ஒன்றும், இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன கப்பல் ஒன்றும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி முதல் தொண்டி வரையிலான இந்திய எல்லைக்குட்பட்ட ஆழ் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதை தவிர உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்திலிருந்து டார்னியர் விமானம் மற்றும் ஆள் இல்லாத விமானமும், அதிநவீன ஹெலிகாப்டரும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்திக்குட்பட்ட இந்திய கடல் பகுதியில் சந்தேகப்படும்படியான படகுகள் வருகின்றதா என இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்தபடி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களிடம் கடலில் சந்தேக படும்படியான நபர்களையோ, படகுகளையோ, புதிதாக ஏதேனும் படகுகளையோ கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மீனவர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story