திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத தவன உற்சவம்


திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத தவன உற்சவம்
x

திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத தவன உற்சவத்தையொட்டி, உற்சவர் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தவன உற்சவம் 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மாசி மாத பருவ காலத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி செடி, கொடிகள், புல், பூண்டுகளுக்கு அருளாசி வழங்குவதும், தவனக்கொழுந்து எனப்படும் மரிக்கொழுந்து மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதும் தவன உற்சவம் எனப்படுகிறது.

தவன உற்சவம்

அவ்வகையில் இந்தாண்டு மாசி மாத தவன உற்சவம் நேற்று முருகன் கோவில் வெகு விமரிசையாக தொடங்கியது. சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பிறகு வள்ளி தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தவன உற்சவத்தையொட்டி கோவில் முழுவதும் கண்னை கவரும் வகையில் வண்ண வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


Next Story