திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை


திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 29 Jun 2023 6:47 PM GMT (Updated: 30 Jun 2023 9:49 AM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர்

பக்ரீத் பண்டிகை

முஸ்லிம் மக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தியாக திருநாளாக முஸ்லிம்கள் இ்ந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் முஸ்லிம்கள் தியாகத்தை போற்றும் வகையிலும், பலிக்கு ஈடாக இறைவன் ஆட்டை பலியிட கொடுத்ததையும் நினைவு கூர்ந்து தொழுகை நிறைவேற்றுகிறார்கள்.

பக்ரீத் பண்டிகை நேற்று காலை திருப்பூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம் மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதில் சிறுவர்களும், பெரியவர்களும் என ஏராளமானவர்கள் பங்கேற்றார்கள்.

திடல் தொழுகை

திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதுபோல் பெரியபள்ளிவாசல், காயிதேமில்லத் நகர் பள்ளிவாசல், மதீனா பள்ளிவாசல், வெங்கடேஸ்வரா நகர் பிலால் பள்ளிவாசல், சத்யாநகர் பள்ளிவாசல், எஸ்.ஐ.ஓ. பள்ளிவாசல் உள்ளிட்ட மாநகரம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாநில பேச்சாளர் இல்யாஸ் பெருநாள் சொற்பொழிவாற்றினார். இதில் ஆண்களும், பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் தொழுகை நடைபெற்றது. குமரன் காலனியில் த.மு.மு.க. சார்பில் திடல் தொழுகை நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு, மாடுகள் இறைச்சிக்காக பலியிடப்பட்டு இறைச்சியை ஏழை, எளிய மக்கள், உறவினர்களுக்கு கொடுத்து பிரியாணி தயாரித்து மற்றவர்களுக்கு வழங்கி கொண்டாடினார்கள். இதன் காரணமாகபல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில்முஸ்லிம்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படிதிருப்பூர் மாவட்டத்தில் நேற்று பக்ரீத் பண்டிகையொட்டி 2 ஆயிரம் மாடுகள், 25 ஆயிரம் ஆடுகள் பலியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


Next Story