பொறியியல் மாணவரின் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ. மாணவர் - தனியார் கல்லூரி வாகனத்தில் பயங்கரம்


பொறியியல் மாணவரின் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ. மாணவர் - தனியார் கல்லூரி வாகனத்தில் பயங்கரம்
x

நிதிஷ்குமார் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முசிறியைச் சேர்ந்த பெரியசாமி மகன் நிதிஷ்குமார். இவர் தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். வழக்கம்போல இன்று காலையில் அவர் கல்லூரி வாகனத்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கும் தொட்டியத்தைச் சேர்ந்த மாணவர் அண்ணாமலை, தனது பாக்கெட்டுக்குள் வைத்திருந்த சூரிகத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்தை அறுத்துள்ளார்.

மாணவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட வேன் டிரைவர், வாகனத்தை உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று, நிதிஷ்குமாரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார், அண்ணாமலையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நிதிஷ்குமார் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முதல்கட்ட விசாரணையில், 'நிதிஷ்குமாருடன் அண்ணாமலை நெருங்கி பழகி வந்துள்ளார். இருவரும் கல்லூரி வாகனத்தில் ஒன்றாக அமர்ந்து சென்று வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிதிஷ்குமார் அண்ணாமலையுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் இன்று வழக்கம்போல நிதிஷ்குமார் தன்னுடன் அமராமல் வேறு இருக்கையில் அமர்ந்து வந்ததால் கோபமடைந்த அண்ணாமலை, கத்தியால் நிதிஷ்குமாரை தாக்கியுள்ளார்' என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story