மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 11 Oct 2023 8:45 PM GMT (Updated: 11 Oct 2023 8:45 PM GMT)

கோத்தகிரி, குன்னூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நீலகிரி

கோத்தகிரி, குன்னூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாம்

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, குன்னூர் வட்டார வள மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அதிகாரி நந்தகுமார் கலந்துகொண்டு பேசினார். உதவி திட்ட அவலுவலர்கள் கணேஷ், விஜயகுமார், வட்டார கல்வி அலுவலகர்கள் சரஸ்வதி, யசோதா, தலைமை ஆசிரியர் சுந்தர மூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

உதவி உபகரணங்கள்

முகாமில் நீலகிரி மாவட்ட அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோதித்து சிகிச்சைக்கான பரிந்துரைகளை வழங்கினர். மேலும் 20 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இது தவிர 11 பேருக்கு உதவி உபகரணங்கள், 27 பேருக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அட்டை வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இதில் 115 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன் அடைந்தனர்.

அடையாள அட்டை

இதேபோன்று கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலர் விஜயகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் வரவேற்றார். முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து காது கேட்கும் கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கவும், அறுவை சிகிச்சை செய்யவும் டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். மேலும் 10 பேருக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின்னர் 9 பேருக்கு உபகரணங்கள் வழங்கவும், 5 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் 110 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயனடைந்தனர்.


Next Story