டெங்கு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு மருத்துவத்துறை உத்தரவு


டெங்கு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு மருத்துவத்துறை உத்தரவு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 22 Sep 2023 10:46 AM GMT (Updated: 22 Sep 2023 10:52 AM GMT)

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு யாருக்கேனும் உறுதி செய்யப்பட்டால் பொது சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், பரிசோதனை மையங்களுக்கு மருத்துவத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் மருத்துவத்துறை இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. மேலும், டெங்கு பாதிப்புகள் குறித்து மருத்துவமனைகள் தகவல் தராவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story