மேகதாது விவகாரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


மேகதாது விவகாரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x

மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதன் தலைவர் கூறியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க நான் வலியுறுத்திய நிலையிலும், ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், மேகதாது அணை குறித்து காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அதன் தலைவரே கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

23ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க நான் வலியுறுத்திய நிலையிலும், ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், மேகதாது அணை குறித்து காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அதன் தலைவரே கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

நேற்று முன்தினம் காவிரி மேலாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மேட்டூர் அணையை ஆய்வு செய்துவிட்டு மாலையில் கல்லணைக்கு வந்து ஆற்றின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆய்விற்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் அளித்த பேட்டியில், மேகதாது அணை குறித்து 23ம் தேதி விவாதிக்கப்படும். இதுகுறித்து விவாதிக்கப்பட கூடாது என்று கூறுவது தவறு என்றும் கூறியிருக்கிறார்.

சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி, நீர்ப்பங்கீட்டை செயல்படுத்துவது தான் காவிரி மேலாண்மை வாரியத்தின் பணி என்று அதற்கான ஆய்வு வரம்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, மேகதாது அணை குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் 177.25 டிஎம்சி நீரை மாதாந்திர அட்டவணையின்படி அளிக்கிறதா என்பதைத்தான் காவிரி மேலாண்மை வாரியம் உறுதி செய்ய வேண்டும். அதைவிடுத்து மேகதாது அணை கட்டப்படுவது குறித்து விவாதிக்கப் போகிறோம் என்று கூறுவது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

எனவே தமிழக முதல்-அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அதில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.






Next Story