'கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சொல்லிவிட்ட காரணத்தினாலேயே மேகதாது அணையை கட்டிவிட முடியாது' - கே.எஸ்.அழகிரி


கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சொல்லிவிட்ட காரணத்தினாலேயே மேகதாது அணையை கட்டிவிட முடியாது - கே.எஸ்.அழகிரி
x

காவிரி நீரை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டின் தெளிவான வழிகாட்டுதல்கள் யாரும் மீறிவிட முடியாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சென்று மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்தில் பா.ஜ.க.வினர் ஒப்புதல் பெற்றார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கர்நாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதாக அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் சொன்ன ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு அண்ணாமலை தேவையற்ற வாதங்களை முன்வைக்கிறார். கர்நாடகத்தில் நடைபெறும் எதிர்கட்சிகளுடைய கூட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றால், அவர் திரும்ப தமிழகத்துக்கு வர முடியாது. 'கோ பேக் ஸ்டாலின்' என்ற கோஷத்தை முன்வைப்போம் என்கிறார்.

கர்நாடக மந்திரி சொன்னதற்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தனது கடுமையான மறுப்பை தெரிவித்திருக்கிறார். எந்தக் காரணத்தை கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என்று அவர் உறுதியாக சொல்கிறார். ஆனால், அண்ணாமலையோ சிவகுமார் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரே ஒழிய, தமிழக நீர்வளத் துறை அமைச்சரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. காரணம் அரசியல்.

தமிழக முதல்-அமைச்சர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அண்ணாமலை. அவர் போய் மக்கள் பிரதிநிதியை உள்ளே விட மாட்டேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. சர்வாதிகாரத்தினுடைய உச்சவெறி அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. காவிரிப் படுகையின் மண்ணின் மைந்தர் மட்டுமல்ல, தமிழகத்தின் மண்ணின் மைந்தரே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அவரை உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல இவர் யார்?

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிற பழக்கம் சிலருக்கு உண்டு. அதைத்தான் இன்றைக்கு அண்ணாமலை செய்கிறார். கர்நாடகத்தில் பொம்மை அரசாங்கம் இருந்த போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சென்று மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்தில் ஒப்புதல் பெற்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர்.

சட்டப்படி, மரபுபடி காவிரி நீரை பயன்படுத்துகிற மாநிலங்களின் அனுமதியை பெற்றுத் தான் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மேகதாது அணை வரைவுத் திட்டத்தை அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால், பாரதிய ஜனதா கட்சியினர் டெல்லியிலும், கர்நாடகத்திலும் சேர்ந்து தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் அனுமதியை கேட்காமல் அங்கீகாரம் அளித்தார்கள். துரோகத்திலேயே மிகப்பெரிய துரோகம் இதுதான். மேகதாது அணை கட்டுவதற்கான முதல் முயற்சியும் இதுதான்.

அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. எடப்பாடி அரசு வாய்மூடி மௌனமாக இருந்தார்கள். ஆனால், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தோம். சதிகார கும்பலாகிய நீங்கள் தமிழக விவசாயிகளுக்கு எதிரான சதியை செய்து விட்டு, இன்றைக்கு ஏதோ நீங்கள் தான் பாதுகாவலர் என்று பாசாங்கு செய்கிறீர்கள். உங்களுடைய உண்மை முகம் வெளிச்சத்திற்கு வரும்.

காவிரி நீரை பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. மழைக்காலங்களில் எவ்வளவு நீர் தர வேண்டும், வறட்சி காலங்களில் எவ்வளவு நீர் தர வேண்டும் என்பது பற்றியும், இருக்கிற நீரை கர்நாடகத்தின் மற்ற ஏரிகளில் தேக்கி வைப்பது எவ்வளவு சட்ட விரோதம் என்பது பற்றியும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதனை யாரும் மீறி விட முடியாது.

கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே அந்த அணையை கட்டிவிட முடியாது. தமிழ்நாடு அரசும், தமிழக காங்கிரசும் மற்றும் எங்களுடைய கூட்டணி கட்சிகளும், சட்டமும், நீதியும் அதை ஒருபோதும் அனுமதிக்காது'' என்று கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story